Google

Friday, March 30, 2007

வீடு வசப்படும்

ஒரு அமைதியான
தெருவில் எங்கள்
வீடு...பார்ப்பவர்களை
கவரும் தோற்றத்துடன்
இருந்தது.

திண்ணையும்
மாடியும்தான்
எனக்கு மிக மிக
பிடிக்கும்.

நண்பர்களுடன்
அமர்ந்து
அரட்டை அடிக்க
சினேகிதிகளுடன்
சினேகிக்க
மழை பெய்யும்போது
தூவாணங்களை
ரசிக்க என்று.......

என்னுடைய
படிப்புகள்
சிந்தனைகள்
அனைத்தும்
மாடியில்தான்.

அப்போது வீசும்
தென்றல்
முகத்தை
தழுவிச்
செல்லும்போது
ஏற்ப்படும் பரவசமே
தனித்தான்.

எனக்கு பூக்கள்
மீது அப்படி
ஒரு மோகம்
எனவே மாடியில்
விதவிதமான
மலர் செடிகள்
மணம் பரப்பியபடி.

காலங்கள்
உருண்டோடின
எங்கள் வீடு
கைமாறிப் போனது.

மலர்ச் செடிகள்
அடியோடு
பெயர்த்தெடுக்கப்
பட்டன.

விசாரித்துப் பார்த்ததில்
வீடு வாங்கியவர்க்கு
மலர்ச் செடிகள்
பிடிக்காதாம் !?

பூக்களை
பிடிக்காதவர்களுக்கு
ஒன்று சொல்கிறேன்.

பூக்களை
ரசிக்காதவர்கள்
தன் வாழ்க்கையை
வாழத் தெரியாதவர்கள்.

எங்களுக்கு
மட்டும் வீடு
தொலையவில்லை
பூக்களை
நேசிக்கும்
வண்டுகளுக்கும்தான்

வீட்டுடன்
சேர்த்து
என் சிந்தனைகள்
ரசனைகள்
விருப்பங்கள்
திசைமாறிப் போயின.

இப்போதோ
ஆதரவின்றி
மறு வீட்டில் நாங்கள்
அத்தனை வசதிகளும்
இல்லையென்றாலும்
சில கடமைகளை
முடித்த மன நிறைவு.

என்றாவது
ஒரு நாள்
எங்கள் வீடு
வசப்படும்
என்ற நினைவுகளுடனே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்

அந்த வீட்டில்
நாங்கள்
மட்டும்
வாழ்வதற்க்காக
அல்ல.

நான்
நேசிக்கும்
பூக்களும்
பூக்களை
நேசிக்கும்
வண்டுகளும்
வாழ்வதற்க்காகத்தான் !!

Saturday, August 19, 2006

வெளிநாட்டு வாழ்க்கை

கீழ்கண்ட கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.உங்கள் பாராட்டுகள் அனைத்தும் இந்த கவிதை எழுதியவருக்கு சேர்வதாக...

-ஹயாத்
--------------------------------------------------------------------------

அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசத்தில்
எரிந்துக் கொண்டிருக்கிறோம்.

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெறிந்து வீசிய ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்

கண்தெரியாத தேசத்தில்
விழுந்து தலையனையில்
தலைசாய்த்துக் கண்ணீர்
வடிக்கிறோம்
ஒவ்வொரு நாளும்

மொத்த குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது

நமக்கு மட்டும் ஏன் பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகி விட்டது ?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியானியிலும்
முற்றுப்பெற்று விடுகிறது
நம் பண்டிகைகள் ஒவ்வொன்றும்

உயிரைப் பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்க்கை ?

கலவரத்தில் கைக் குழந்தையை
தொலைத்த தாயின்
பதற்றத்தைப் போல்தான்
ஒவ்வொரு முறையும்
போன் பேசிய பின்னால்
அடையும் அவஸ்தைகள்

நம்மில் பல பேருக்கு
தாம்பத்திய வாழ்க்கைக் கூட
தவணைமுறையில்தான்
தட்டப்படுகிறது

தொலைபேசியிலும்,தபாலிலும்
கொஞ்சலும், சினுங்களுமாய்
இன்ஸ்டால்மென்டில்
இல்லறம் நடக்கிறது

மனைவியின் மூச்சுக்காற்று
தந்த சுகம் கூட
இந்த ஏ.சி காற்று தருவதில்லை !?

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்க விட்டுவிட்டு
தீக்குச்ச்¢கள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப்படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி ?

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் தேவையானவற்றை
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர

காலத்தின்
இந்த மாற்றங்கள்
நம்மை அறவணைக்காமல்
வெறுப்படைய
செய்வதற்க்குத்தானா ?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கிறோம்
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும்,விரகத் தீயிலும்
எறிந்துபோகும் நம்
வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள்
அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்

என்னச் சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார் !?

Thursday, August 17, 2006

வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு கடிதம்

நண்பனே,

இறைவன் உனக்கு நல்ல சிந்தனையை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.

உண்மையில் உன்மீது எனக்குக் கடும் கோபம், வீட்டிற்கு போன் செய்தபோது அம்மா சொன்னார்கள் " நீ இன்று என் வீட்டிற்கு பயணம் சொல்ல வந்தாயாம்.இது ஆறாவது முறை ! மீசை முளைக்காத வயதில் கண் கலங்க வார்த்தைகளை மென்று முழுங்கி முதன்முதலாக "வெளிநாடு போகிறேன்" என்று பயணம் சொல்ல வந்தாய்.பதினான்கு வருடத்திற்கு பிறகு இன்றும் பயணம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

இன்னும் எத்தனை முறை பயணம் சொல்வாய்..? 14 வருடமாக அப்படி என்னதான் சம்பாதித்து விட்டாய் ? உன் திறமைக்கும்,உழைப்புக்கும்,படிப்பிற்கும் இங்கேயே 14 வருடத்தில் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.

முதன் முதலாய் திரும்பி வந்தபோது உன் அம்மாவின் நோயையும் அவர்கள் படும் கஷ்டத்தையும் அருகிலிருந்து பார்த்த பிறகும் கூட நீ விடுமுறை முடிந்து போனாய்....கல்நெஞ்சக்காரன் நீ....!

அதற்கடுத்து ஏதோ ஒரு விடுமுறையில் நீ வரும்போது உன் அப்பா இல்லை.

உன்னைத் தூக்கி வளர்த்த உன் அப்பாவின் மரணத்திற்கு தொலைபேசியில் கதறினாய்.ஒரு வாரமாய் சாப்பிடாமல் தவித்தாய்..இதுதான் பெற்றோருக்குச் செய்யும் கடமையா ..?

கடைசி காலத்தில் மருந்து கூட வாங்க ஆளில்லாமல் பிள்ளையிருந்தும் அனாதையாய்தான் இறந்து போனார்.அவரின் பிணத்தை கூட உன்னால் பார்க்க முடியவில்லை.

கோடி ரூபாய் அப்பா,அம்மாவிற்கு அனுப்பினாலும் கடைசி காலத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு உன் வெளிநாட்டு வாழ்க்கை என்ன பதில் தரும் ?

உன் தங்கச்சி படிப்பிற்கும் பணம் அனுப்பினாய் ,திருமணத்திற்கு நகை,பணம் தந்தாய். அன்பும்,அரவணைப்பும் இல்லாத பாசங்களை காகிதத்திலே பரிமாறும் உறவாகி நிற்கிறாள் அவள்.

நண்பா,

கல்யாணத்திற்கு முன்பு எப்படியோ..! ஆனால் உன்னையே வாழ்க்கை என்று வந்த மனைவியை விட்டுவிட்டு 45 நாட்களில் வெளிநாடு போனாய்.எப்படிடா மனம் வந்தது ? நீ கோபப்பட்டாலும் சரி..உன் மீது உரிமையுடன் கேட்கிறேன்..எதற்காக திருமணம் செய்தாய் நீ ?

45 நாட்கள் அன்பையும்,பாசத்தையும் அள்ளி அள்ளித் தந்து விட்டு ஏங்கித் தவிக்க பறந்து விட்டாயே..! பணம் மட்டும்தான் வாழ்க்கையா ?

எல்லாவற்றையும் விடு

இந்த முறை உனக்கான ஒரு வாரிசு...! அந்தப் பிஞ்சு முகத்தை மறந்து செல்லத் துணிந்து பயணம் சொல்ல வந்திருக்கிறாய்.அன்புக் குழந்தையின் பொக்கை வாய் சிரிப்புக்கு...உன் லட்சங்கள் தூசுதான்.

நீ உயிரோடிருந்தும் உன் குழந்தை தந்தையின் அரவணைப்பு,கணடிப்பு,அறிவுரையில்லாமல் வளரப் போகிறது.


வேண்டாம் நண்பனே...! இப்படிச் சம்பாதிக்கச் சொல்லி யாரும் உன்னை நிர்பந்திக்கல..! சென்னையில் கூட என்னால் இருக்க முடியவில்லை,நம் மண்னைத் தேடுகிறது, நம் ஊர் காற்றுக்கு உயிர் ஏங்கி தவிக்கிறது.அம்மாவின் மடியில் தலை வைத்து ஊர் கதை கேட்க ஆவல் கொள்கிறது.அப்பாவிற்கு சொடக்கு விட..தம்பியை அதட்டி படிக்க் சொல்ல...தெருவில் உள்ளவர்களுடன் உறவாட....

இதற்கெல்லாம் எத்தனை கோடி ஈடாகும்..? அப்பா,அம்மா,மனைவி,மக்கள்,குடும்பம்,சொந்தம்,கா தல், கனிவு, சுற்றம்,பந்தம்...எல்லாவற்றையும் விட..இளமையைத் தியாகம் செய்து விட்டு...எத்தனை...எத்தனை...நண்பர்கள் நம்மூரிலே...!

14 வருடத்தில் 6 விடுமுறை ! ஒரு விடுமுறைக்கு 2 மாதம் வீதம் 1 வருடம் ஊரோடு இருந்திருக்கிறாய்.13 வருடம் அகதியாய் வாழ்ந்திருக்கிறாய்.

இம்மண்ணின் மைந்தன் நீ! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது! உன் வாழ்வுக்கா இங்கு வழியில்லை?

ஊரிலே நல்லதொரு தொழில் தொடங்கு அல்லது உன் படிப்புக்கு வேலை தேடு .கால் வயிறு கஞ்சின்னாலும் மனம் நிறைஞ்சு வாழணும்...

உன் பயணத்தை ரத்து செய்..ஊரில் தொழில் துவங்கு...உன் முதல் பார்ட்னர் நான்..!

மற்றவை நேரில் பேசுவோம்...போய் விடாதே! நான் வரும்போது நீ ஊரில் இருக்கணும்..?!

எதிர்பார்ப்புடன்
உன் நண்பன்

Wednesday, August 16, 2006

உறவுகள் மேம்பட சில வழிகள்.

குடும்பமானாலும் சரி, அலுவலகமானலும் சரி...உறவுகள் மேம்படவும், உறவில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் , ஏற்பட்ட விரிசல்கள் பெரிசாகாமல் இருக்கவும் கீழ்கண்ட அறிவுரைகள் நமக்கு பயன் தருவதாக இருக்கிறது.


# நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

# அர்த்தமில்லாமலும்,பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.(Loose Talks)

# எந்த விஷயத்தையும்,பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise)

# சில நேரங்களில் ,சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)

# நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.(Adamant Argument)

#குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)

# உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales)

# மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)

# அளவுக்கதிகமாய் ,தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

# எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ,இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

# கேள்விப் படுகிற எல்ல விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

# அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

# உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் ,கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)

# மற்றவர் கருத்துக்களை,செயல்களை ,நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)

# மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும்,இனிய,இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

# புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

# பேச்சிலும்,நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து,அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

# அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

# பிரச்சனைகள் ஏற்படும்போது ,அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.


Saturday, August 12, 2006

ஒரு கற்பனை காதல் கடிதம்

நான் எந்த பெண்ணுக்கும் இதுவரை காதல் கடிதம் கொடுக்கவில்லை...அப்படி நான் கொடுத்திருந்தால் அந்த கடிதம் எப்படி இருக்கும்...? ஒருவேளை இப்படி இருக்குமோ?! இதோ உங்களுக்காக ஒரு கற்பனை காதல் கடிதம்

----------------------------------------------------------------------------------------------

என் காதல் தேவதை மீராவுக்கு
,

ராஜாவின் இதய மடல் இது என்பதை விட இதயம் என்றே சொல்லலாம்.என் இதயம் துடிக்கும் இசை உங்களுக்கு கேட்கிறதா ? பொதுவாக ஒழுங்கற்ற சத்தங்களை நாம் ஓசை என்றே சொல்வோம்.ஆனால் நான் இங்கு இசை என்கிறேன்.என் இதய ஓசை எப்போது இதய இசையானது என்று உங்களுக்காக கொஞ்சம் நினைவு கூர்கிறேன்.

என் வாழ்நாள் மிக சாதாரணமாக சென்று கொண்டிருந்தது.எனக்கு நிலவு என்றால் மிக பிடிக்கும் எப்போதும் நான் நிலவை என் காதலியாக நினைத்துக் கொள்வேன். அமாவாசை அன்று நிலவு கண்ணுக்கு தெரியாதபோது நான் வானத்தை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.அப்போதெல்லாம் என் காதலி என்னுடன் கோபித்துக் கொண்டு சென்று விட்டதாகவே எண்ணுவேன்.

இப்படியாக என் காதலியுடன் கூடலும்,ஊடலுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. மற்றும் நான் நிலவு மீது வைத்திருந்த காதல் நிலவு பாடல்களையெல்லாம் ரசித்து கேட்கும்படி ஆனது. அப்போது ஒரு நாள் என் தேவதை மீராவின் உருவம் நிலவின் மேல் தெரிந்தது.கண்ணன் மேல் பைத்தியம் கொண்ட ,கண்ணனை உருகி காதலித்த மீரா உருவமா அது என்று உற்று நோக்கினேன். அந்த மீரா இல்லை. அப்போது நீங்கள் எனக்கு உருவமில்லாமல் உணர்வாக மட்டும் தெரிந்தீர்கள். இவ்வளவு நாட்களாக நான் பார்த்து கொண்டிருந்தது நிலா அல்ல , என் மீராதான் என்று அன்றுதான் உணர்ந்தேன். நிலாவை பார்க்கும் என் பார்வையில் ஒரு மாற்றம் இப்போதெல்லாம் நான் நிலாவை என் காதல் மீராவாக பார்க்கிறேன். அது நிலவு இல்லை நீங்கள்தான் என்று தெரிந்தவுடன் என் அன்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.


வானத்தில் காற்றில்லாத பகுதியில் ஆக்சிஜன் இல்லாமல் உங்கள் நினைவையே ஆக்சிஜனாக,சுவாசமாக கொண்டு மிதப்பதை போன்ற பரவசம் கொண்டேன். அந்த பரவசத்திற்கு உலகில் எதுவுமே ஈடாகாது. அப்போதுதான் என் இதய துடிப்பின் லப்டப்..... லப்டப்.. என்று அர்த்தம் இல்லாமல் துடித்து கொண்டிருந்த என் இதய ஓசை மீரா....மீரா என்று அர்தத்துடன் துடிக்கும் இசையானது.

உங்கள் மேல் கொண்ட காதலானது எதை பார்த்தாலும் உங்களை பற்றிய நினைவுகளை தந்தது. "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் நெஞ்சம் சொல்கின்றது" - இந்த பாட்டு எனக்கு மிக பிடித்த பாடலானது.நீங்கள் பயன்படுத்தும் "இனிய" என்ற வார்த்தை எனக்கு இனிப்பானது. இப்போது எனக்கு உலகமே உற்சாகமாக தெரிகிறது.


உங்களுடன் பேசாத நாட்களில் ஏற்பட்ட என் இதய வலியின் அளவானது எங்கள் ஊரிலிருந்து ஆரம்பித்து உங்கள் ஊர் வரை நீண்டது. வலியின் உணர்வை கிலோமீட்டர் கணக்கில் சொல்லும் திறமை உங்களை காதலித்தவுடன்தான் எனக்கு ஏற்பட்டது.

நான் சிரித்தால் கன்னத்தில் குழி விழும்...இது அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்...இந்த கன்னக்குழியில் உங்களின் நினைவுகளை தேக்கி வைத்திருப்பதால்தான் அழகாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

எனக்கு அறிமுகமான இந்த மீரா என்பவர் யார் ? -என்று என் மன அகராதியை புரட்டி பார்க்கிறேன். அதில் 

----------MEERA----------என்பதற்கு

Meritorious - மெச்சத்தக்க
Enigmatic - புரிந்துக் கொள்ள முடியாத
Equanimity - சாந்தமான
Righteous - நற்குணமுள்ள
Angel - தேவதை


மெச்சத்தக்க புரிந்துக் கொள்ள முடியாத சாந்தமான நற்குணமுள்ள தேவதை என்று இருக்கிறது.ஆம் நீங்கள் என் இதய தேவதை. என் இதயத்திற்கு இசை வடிவமான துடிப்பை கொடுத்தவர். என் சுவாசத்திற்கு உங்கள் நினைவையே கொடுத்தவர்.

மற்றும் என் பெயருடன் உங்கள் பெயரை இணைத்து பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி........மீரா(ஜா)..இப்படி உங்களை காதலிப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி.......எத்தனை சுகம்.....

உங்கள் காதுகளில் அணிந்திருக்கும் அணிகலன்களை கேட்டு பாருங்கள். உங்கள் தலைமுடியை கலைப்பது தென்றல் காற்று அல்ல எனது மூச்சு காற்று என்று சொல்லும்.இனிமேல் உங்கள் முடியை கலைப்பது தென்றல் அல்ல என் மூச்சு காற்று என்பதை உணருவீர்களா ?...

உங்கள் மீது காற்று வீசும்போதும்,மற்றும் நிலவை பார்க்கும்போதும்,”உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வுஎன்ற பாட்டை கேட்கும்போதும், பாடல்களில் வரும் நிலவு என்ற வார்த்தையை கேட்கும்போதும், இந்த நான்கில் எதிலாவது ஒன்றில் எப்போதாவது என் நினைவு உங்களுக்கு வந்தால் என் காதல் உண்மையென்றும்,நீங்கள் என்னை காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றும் அர்த்தம்.

எனக்கு பதில் எழுதாவிட்டாலும் பரவாயில்லை என் காதலுக்கு ,காதல் மனதுக்கு தாங்கள் அவசியம் பதில் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் காதலுடன்

(மீ)ராஜா

-------------------------------------------------------------------

இந்த கடித்தத்திற்கு வந்த பதிலை Comments- என்பதை கிளிக்கி பாருங்கள்.

Thursday, August 10, 2006

என் இனிய காதலிக்கு

நீ
சிரிக்கும்போது
நான்
சிரித்தால்
உன் சிரிப்போசை
கேட்காதென்பதால்
நான்
சிரிப்பதை
தவிர்த்தேன்.

நீ
பேசும்போது
நான் பேசினால்
உன் பேச்சு
கேட்காதென்பதால்
நான் பேசுவதை
தவிர்த்தேன்.

நீ
பார்க்கும்போது
நான் உன்னைப்
பார்த்தால்
உனக்கு பார்வை
தடுமாறும்
என்பதால்
நான்
பார்ப்பதை
தவிர்த்தேன்.

நீ
தூங்கும்போது
நான் தூங்கினால்
உன் கனவில்
நான் வருவேனோ
மாட்டேனோ
என்பதால்
நான் தூங்குவதை
தவிர்த்தேன்.

நீ
நடக்கும்
தெருவில்
நான் நடந்து
சென்றால்
உன் கால் தடம்
அழியும்
என்பதால்
நடப்பதை
தவிர்த்தேன்.

இப்படி
சிரிப்பது,பேசுவது
பார்ப்பது,தூங்குவது
நடப்பது
என்ற அத்தனை
செயலையும் நான்
இழந்திருக்கும்
இவ் வேளையில்

நீ என்னை
காதலிக்கிறேன்
என்று
சொன்னால்
நான்
உயிர் பெற்று
விடுவேன் !!